சி.எம்.எஸ் சுத்தாங்க சுவிசேஷ திருச்சபையின் வரலாறு

பத்தொன்பதாம் நாற்றாண்டில் நாசரேத் வட்டார எஸ்.பி.ஜி சபைகள் சிலவற்றில் பிளவு ஏற்பட்டு சட்டம் பிள்ளை மார்க்கம் என்று புதியதொரு மார்க்கம் உருவாகி அது இன்றும் நிலைத்துள்ளது. இதே போல் இருபதாம் நூற்றாண்டில் சி.எம்.எஸ் மிஷனெரிகளால் உருவாக்கப்பட்ட சபைகள் சிலவற்றில் பிளவுஉண்டாக சி.எம்.எஸ் சுத்தாங்க சுவிசேஷ சபை என்று புதியதொரு சபைப்பிரிவு உருவாக்கப்பட்டு, அதுவும் இன்று வரை நிலைத்துள்ளது. ஆனால் இரண்டு பிரிவினைகளுக்கும் வெவ்வேறு காரணங்கள் உண்டு. நாம் அறிந்துள்ளபடி நெல்லை மாவட்டத்தில் சி.எம்.எஸ், எஸ்.பி.ஜி என்ற இரு சுவிஷேசசங்கங்களும் தனித்தனியாக இயங்கி வந்து சுவிசேஷத்தை அறிவித்தனர். தங்கள் ஊழியங்கள் மூலம் உருவான சபைகளை தங்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் பராமரித்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இச்சபைகள் சென்னை பேராயரின் ஆன்மீக ஆளுகைக்குள் இருந்தன. பின்னர் 11.3.1877 ல் சென்னை பேராயர்களாக சி.எம். எஸ், சபைகளுக்குப் பிஷப் சார்ஜென்ட்டும் பேராயரின் உதவி எல்.பி.ஜி. சபைகளுக்கு பிஷப் கால்டுவெல்லும் அபிஷேகம் செய்விக்கப்பட்டனர். இவர்களின் மரணத்துக்கு பின் இருசபைகளுக்கும் சேர்ந்து ஒரே பிஷப்பாக சென்னையிலிருந்து பிஷப் சாமுவேல் மார்லி அபிஷேகம் செய்விக்கப்பட்டார். எனினும் இவர் ஆன்மீக ஆளுகைப் பொறுப்பை மட்டுமே கவனிக்க, நிர்வாகப் பொறுப்புகளை முன் போல் சி.எம்.எஸ் , எஸ்.பி.ஜி. சங்கங்களே கவனித்து வந்தன.

பின்னர் 1905ல் பிஷப் A.A. வில்லியம்ஸ் வந்து சேர்ந்தார். இருசங்கங்களின் நிர்வாகங்களும் முன்போல் தனித்து இயங்கிவரவே, இவைகளை இணைத்து செயல்பட வைக்க 1908 ஆம் ஆண்டு ஓர் ஐக்கிய கூட்டம் நடைபெற பிஷப் ஏற்பாடு செய்தார். நெல்லை பேராயம் உருவாக இருசங்கங்களும் இணைய வேண்டும் என்பது இக்கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது. பிஷப் வி.எஸ் அசரியா அவர்களும் இவ்வைக்கியத்தைப் பெரிதும் விரும்பினார்கள். இதன் பின்னர் 1915ல் பிஷப் ஹென்றிவாலர் அவர்கள் நெல்லைப் பேராயராக சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவர்கள் சபைகளின் ஐக்கியத்திற்காக ஊக்கமாக ஜெபித்து வந்தார்கள். இதற்காக தனது இல்லத்தில் ஓர் சிற்றாலயமும் கட்டினார்கள். தான் ஊழியம் செய்த காலத்திலும் (1915-22) தனது உபதேசங்களில் இவ்வைக்கியத்தை வற்புறுத்திவந்தார்கள்.

1917ல் சி.எம்.எஸ், எஸ்.பி.ஜி. சங்கங்கள் இரண்டிற்கும் பொதுவாக ஒரு ஆலோசனை சங்கத்தை நிறுவினார்கள். 1918 ஏப்ரலில் முதல் நிர்வாக சபை நாசரேத்தில் கூடியது. நெல்லைப் பேராயம் உருவாக மிகவும் முயற்சி செய்தவர்கள் பிஷப் வாலர் அவர்கள் தான். ஆனால் 1923 ஜனவரி முதல் இவர்கள் சென்னை பேராயராக மாற்றப்பட்டார்கள். இவர்களுக்குப் பதிலாக பிஷப் நார்மன் ஹென்றிடப்ஸ் அவர்கள் 1923ல் நெல்லைப் பேராயராக பாளையங்கோட்டையில் அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் இவர்கள் காலத்தில், 1924 மார்ச் 11ல் அத்தியட்சர், ஆலோசனை சபை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது இருசங்கங்களின் பிரதிநிதிகளாக 100 குருமார், 147 சபை பிரதிநிதிகள், 5 பார்வையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். ஐக்கியத்திற்கான வாத, பிரதி வாதங்கள் விவாதிக்கப்பட்டன.

முடிவில் பிஷப் அவர்கள் ஐக்கிய ஏற்பாட்டிற்காக அனைவரின் சம்மதத்தையும் கோர், ஐந்து பேர் மட்டும் அதை எதிர்ப்பதாக கூறிகையை உயர்த்தினர். அவர்களுக்கு சில வாக்குறுதிகள் தரப்பட்டது, எந்த ஆலயத்திலும் பூர்வீக ஆராதனை முறையை சபையின் சம்மதமின்றி மாற்றப்படுவதில்லை. (உதாரணமாக ஆலயங்களில் சிலுவைவைத்தல், குருமார் அணியும் அங்கிகளில் கட்டும் ஸ்டோல்களின் (கச்சை) நிறம்போன்றவை). குருமார், அவர்களின் சம்மதம் இல்லாமல் எஸ்.பி.ஜி. சி.எம்.எஸ் இடையே மாற்றப்பட மாட்டார்கள். (பின்னாட்களில் எஸ்.பி.ஜி. குருவானடி. ஜே. தேவபிரியம் ஐயரவர்கள் சி.எம். எஸ். சர்க்கிளான நாலுமாவடியிலும், சி.எம்.எஸ், எஸ்.பி.ஜி. சர்க்கிள்களிலேயே மாறிமாறி பணியாற்றி மறைந்தவர்களும் உண்டு. அதே போல் சி.எம்.எஸ். வழக்கப்படி கடைசி வரை கறுப்பு ஸ்டோல் மட்டுமே அணிந்த குருமாரும் உண்டு. பிரிவினை கருத்துக்கொண்டவர்கள் அனைவருமே ஆழ்வாநேரி, செவல் சி.எம்.எஸ் வட்டாரங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர்.

இவர்களின் அருகில் எந்த எஸ்.பி.ஜி சபையும் இல்லை. மாறாக இவர்கள் சி.எம்.எஸ். தலைமை ஸ்தலமான பாளையங்கோட்டைக்கு மிக அருகில் இருந்தனர். எனினும் பிரிவினையைத் தீர்க்கமாக நிறைவேற்ற எண்ணியவர்கள் தங்கள் தங்கள் பகுதிகளில் சபைகளில் பிரிவினையை உருவாக்கி சி.எம்.எஸ் சுத்தாங்க சுவிசேஷசபை என்று ஒரு புதிய அமைப்பினை உருவாக்கி அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்த இடங்களில் உள்ள ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் யாவற்றையும் கைப்பற்றினர். வழக்குகள் கோர்ட்டுகளுக்குச் சென்றன. ஒரே ஊரில் ஐக்கிய ஏற்பாட்டை ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும் இருக்கவே பிரச்சினைகள் உருவாயின.  எனவே ஐக்கிய ஏற்பாட்டை ஆதரிக்கும் மக்களை ஸ்திரப்படுத்தி ஊக்குவிக்க ஆழ்வாநேரி செவல் என்று புதியதொரு சர்ச்கவுன்சில் உருவாக்கப்பட்டது. அதற்கு தலைவராக அன்றைய சி.எம்.எஸ் மிஷனெரி (பின்னாளின் நெல்லை பிஷப்) ஜி.டி, செல்வின் ஐயரவர்கள் நியமிக்கப்பட்டார்கள். எனினும் பிரிவினை நிலைத்து விட்டது. ஒரு சில மக்கள் மீண்டும் ஐக்கியத்தில் இணைந்தனர்.  எனினும் ஒரே ஊரில் (அம்பலம், கண்டித்தான் குளம், பானான்குளம்) இரண்டு ஆலயங்கள் இன்றும் உள்ளன. இந்தப் பிரிவினையாளர்கள் கூறிய முதல் காரணம் தங்கள் சி.எம்.எஸ். ஆலயங்களில் எஸ்.பி.ஜி ஆலயங்களைப் போல் சிலுவைகள் வைக்கப்பட்டு விடும். நாளடைவில் ஆராதனை முறைகள் மாற்றப்பட்டுவிடும் என்பதே. எண்பது ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையிலும்  பழைய சி.எம்.எஸ் கொள்கைகளிலேயே நிலைத்து செயல்படும் ஆலயங்களும் சபைகளும் ஏராளம் உண்டு.